Thursday, June 28, 2007

ஊர்களும் அதன் பெயர்களும்!

அன்பார்ந்த நண்பர்களே!! இந்த வலைப்பதிவைத் தொடங்கும்முன் உங்கள் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கை! இப்பதிவை நான் முழுவதும் தூய தமிழில் எழுதலாமென்று முடிவு செய்துள்ளேன்! ஆகையால் பலவீனமான இதயம் உடையோர் மேற்கொண்டு படிப்பதைப்பற்றி நன்கு யோசித்து செயல்படுங்கள்! பதிவுக்கு செல்வோமா?

நான் படிப்பது இயந்திரவியல் எனினும், வரலாற்றின் மேல் எனக்கு அளவு கடந்த காதல் உண்டு! (வரலாறு பாடத்தின் மேல்! ‘வரலாறு’ படத்தின் மேல் அல்ல!) வியப்பூட்டும் செய்திகள் வரலாற்றில் பல இருப்பினும், இன்று நாம் வசித்து கொண்டிருக்கும் ஊர்களுக்கு பெயர்கள் எப்படி வந்தன என்று பார்த்தோமானால், அவற்றின் பின் உள்ள கதைகளும், நிகழ்வுகளும் மிகவும் சுவாரசியமானவை! ஏதோ எனக்குத் தெரிந்த மட்டில் சில ஊர்களைப்பற்றி இங்கு எழுதியுள்ளேன்.

சென்னை:

தமிழகத்தின் தற்போதைய தலைநகருக்கு சென்னை என்று பெயர் ஏற்பட்டது, ஆங்கிலேயர் காலத்தில்! அக்காலத்தில் நம் நாட்டையும் அதன் வளங்களையும் பங்கு போட்டு கொள்வதில் ஆங்கிலேயர்களுக்கும் போர்த்துகீசியர்களுக்கும் கடும் போட்டி இருந்தன! அப்போதைய மதராஸ் ராஜதானி இருந்த இடத்தில் ஆங்கிலேயர்கள் வந்து சேர்ந்தபொழுது போர்த்துகீசியர்களிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ள ஒரு கோட்டை கட்ட வேண்டுமென்று முடிவு செய்தனர்!

கோட்டைக்கு நிலம் தேடிக்கொண்டிருந்த பொழுது இப்போது கூவம் நதி கடலில் கலக்கும் இடத்தினருகே கோட்டையை அமைத்தால் உள்நாட்டு வாணிபத்துக்கும் கடல் வாணிபத்துக்கும் உதவியாக இருக்குமென்று எண்ணினர். அப்போது சென்னை இருந்த இடம், செங்கல்பட்டை சேர்ந்த ஒரு நிலச்சுவான்தாரிடம் இருந்தது. அவரும் ஆங்கிலேயர்களுக்கு தம் நிலத்தை அளிக்க மனமுவந்து ஒப்புக்கொண்டார்! ஆனால் புதிதாக உருவாகும் அவ்விடத்துக்கு தம் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை சூட்ட வேண்டும் என்று விழைந்தார்.

அதன் பெயரிலே அவ்விடத்துக்கு சென்னை என்று பெயர் வழங்கப்பட்டது! ஆங்கிலேயர்கள் அன்று கட்டிய கோட்டைதான் இன்று பல அரசியல்வாதிகள் உள்ளே நுழைவதற்கு பகீரதப்பிராயத்தனம் செய்து கொண்டிருக்கும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை!!

வீராணம் ஏரி:

சென்னையைப்பற்றி பார்த்தோம்! சென்னையின் குடிநீர் ஆதாரமான வீராணம் ஏரியைப்பற்றிப் பார்ப்போம். வீரநாராயணபுரம் ஏரி என்பதே காலப்போக்கில் மருவி வீராணம் ஏரி என்றாயிற்று. இப்போதய கடலூர் மாவட்டத்தில் இருக்கும் இவ்வேரி சோழர் காலத்தில் எடுப்பிக்கப் பட்டது. ‘பொற்கூரை வேய்ந்த தேவர்’ என்றழைக்கப்படும் பராந்தக சோழர் இவ்வேரியை தூர் வாரி கரை எழுப்பினார்.

அப்பொழுதைய கால்த்தில் இவ்வேரி அமைந்த இடம், பாரேழு வள்ளல்களில் ஒருவரான ‘வல்வில் ஓரி’யின் வழி வந்த கடம்பூர் சிற்றரசுக்கு அருகில் இருந்தது. வழி வழியாக சோழ குலத்துக்கு தோள் கொடுத்த கடம்பூர் சிற்றரசின் மக்களின் தாகத்தை தணிக்கும் பொருட்டே பராந்தகச்சோழர் இவ்வேரியை ஏற்படுத்தினார்.

கோயம்புத்தூர்:

முன்னொரு காலத்தில் கோவன் என்ற கொங்கு நாட்டை சேர்ந்த சிற்றரசன் புதூர் எனும் பகுதியை ஆண்டு வந்தான். ‘கோவன் ஆண்ட புதூர்’ என்பதே காலப்போக்கில் மருவி கோயம்பத்தூர் என்றாயிற்று.


திருநெல்வேலி:

தாமிரபரணி ஆற்றினாலேயே திருநெல்வேலிக்கு இத்தகைய பெயர் ஏற்பட்டது. இப்பொழுது மிகவும் சிறியதாக ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணி ஒரு காலத்தில் இலங்கை வரை பாய்ந்து கொண்டிருந்ததாக கிரேக்க பயணக்குறிப்புகள் சொல்கின்றன! அக்காலத்தில் கிரேக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் இலங்கையை ‘தாம்ரபர்ணே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அக்காலத்தில் திருநெல்வேலி இப்பொழுது இருந்த இடத்தில் நெல் பரவலாக பயிரிடப்பட்டிருந்தது. தாமிரபரணி நதியானது, நெல்லை வழியாக பாயும்பொழுது, பாசனத்துக்கு தண்ணீர் அளித்ததோடில்லாமல் ஆற்றின் கரைகளையும் பலப்படுத்திக்கொண்டே சென்றது! ஆகையால் எத்தகைய வெள்ளமும் அச்சீமையில் விளைந்திருக்கும் நெல்லை ஒன்றும் செய்ய முடியவில்லை. நெல்லுக்கு வேலியாய் இருப்பதினால் நெல்வேலி என்றும், அருள்மிகு நெல்லையப்பர் எழுந்தருளியுள்ளதனால் திரு என்ற அடையுடன் திருநெல்வேலி என்றும் பெயர் பெற்றது!

என் இன்னொரு நண்பர் கூறியதாவது:

ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன், நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பேர் வந்ததாக இருந்த்து.

எது உண்மை என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் :)

தஞ்சை பெரிய கோயில்:

பொன்னியின் செல்வன் எனப்படும் இராஜ இராஜ சோழன் எழுப்பிய கோயில் இப்பெரிய கோவில் ஆகும். பொன்னியின் செலவர் வாலிபராய் இருந்தபொழுது அவருடைய தந்தை சுந்தரசோழர் ஆட்சி புரிந்தார். அப்பொழுது பாண்டியனுக்கு உதவி செய்த இலங்கை அரசன் மகிந்தனை அடியோடு அழிக்கும் பொருட்டு இலங்கை சென்றிருந்தார். அங்கே மகிந்தனின் படைகளை துரத்தி ‘ஈழங்கொண்ட வீரர்’ என்ற பட்டத்தையும் பெற்றார். ஓடி ஒளிந்த மகிந்தனை தேடி சிலகாலம் இலங்கையில் தங்க நேர்ந்த பொழுது அங்கு பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டிருந்த புத்த சிலைகளை கண்டு வியப்புற்றார். பிற்பாடு தான் சோழ சிங்காதனத்தில் ஏறிய பிறகு, உலகமே வியக்கும்படி தமிழகத்தில் இத்தைகைய விண்ணுயர சிவாலயங்களை எழுப்ப வேண்டும் என்று உறுதி கொண்டார். அதன் பெயரிலேயே சோழ சிங்காதனத்தில் ஏறிய பிறகு தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்தார்.



இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை எனும் ஊர், சென்னையிலிருந்து 112 km தூரத்தில் உள்ளது! தமிழ்நாட்டின் தோல் தொழிற்கூடம் என்று கூறும் அளவிற்கு தோல் தொழிற்சாலைகளால் நிரம்பியுள்ளது! இராணிப்பேட்டைக்கு இந்த பெயர் எப்படி வந்தது என்று பார்த்தோமானால், ஆங்கிலேய பிரபு ஒருவரும் அவர் துணைவியும் அலுவல் நிமித்தமாக ராணிப்பேட்டையில் தங்கியிருந்தனர்! ஆங்கிலேயரின் துணைவியாருக்கு இந்திய கலாச்சாரத்தின் மேல் அளவு கடந்த பற்று! அப்பொழுது உடன் கட்டை ஏறுதல் தமிழ் கலாசாரத்தில் மிக்க பரவலாக காணப்பட்டது!

அதே போல் அப்பிரபு உயிர்துறந்தபின் ஆங்கிலேய ராணி, தமிழ் பெண்களைப்போலவே உடன்கட்டை ஏறி தம் உயிரை மாய்த்துக்கொண்டார். அவரின் தியாகத்தினாலேயே ராணிப்பேட்டை என்ற பெயர் ஏற்பட்டது!

நண்பர்களே! ஏதோ எனக்கு தெரிந்த வரையில் சில ஊர்களைப்பற்றி எழுதியுள்ளேன். உங்களுக்கும் இதைப்பற்றி தெரிந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள். கண்டிப்பாக பதிவில் ஏற்றி விடுகிறேன்!

அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும்வரை விடை பெறுகிறேன்!

வணக்கம்!!

Friday, June 22, 2007

பயணக்குறிப்புகள் :)

முதல் மொக்கைக்கப்புறம் என்ன எழுதறதுன்னு முழிச்சிட்டுருந்தப்ப சமீபத்துல வாங்கின பல்பைப்பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணேன்! இது ஒரு வாரத்துக்கு முன்னாடி நடந்தது! நான் பாட்டுக்கு லீவுன்னாலும் வீட்டுக்கு போகாம நல்லப்பிள்ளையா காலேஜ்லயே படிச்சுட்டு (ஹி ஹி ஹி) இருந்தேன்! இருந்தாலும் place ஆனபிறகு வீட்டுக்கே போகலைன்னு ஒரு ஃபீலிங். எங்க வீடு இருக்கறது மதுராந்தகத்துல! (செங்கல்பட்டு பக்கம்). நான் படிக்கறது கோவைல! வீட்டுக்கு போகணும்னா சென்னை போற பேருந்துல ஏறி நடுவுல இறங்கணும். நம்ம அரசுப்பேருந்து கண்டக்டருங்க இருக்காங்களே! அவங்களுக்கு ஏதோ ஃபிளைட்ல கண்டக்டரா இருக்கறதா நினைப்பு! சீட் இருக்கான்னு தப்பித்தவறி கேட்டுட்டா போதும், ஏதோ பிச்சை கேட்ட மாதிரி பாப்பானுங்க! எவ்வளவோ முயற்சி பண்ணியும் எவனும் ஏத்த மாட்டேன்னு சொல்லிட்டாங்க! நான் வேற சும்மா இல்லாம என் கூட இன்னொருத்தனையும் கூட்டிட்டு வந்துட்டேன்! “பஸ் கிடைக்கிறதெல்லாம் ஒரு மேட்டரா? வாடா பாத்துக்கலாம்னு!” கூட்டிட்டு வந்தேன்! அவன் வேற கொலை வெறியோட பாத்துட்டு இருந்தான்!


அப்புறம் தட்டுத்தடுமாறி ஒரு தனியார் பேருந்துல இடம் கிடைச்சுது! ஆனா டிக்கெட் 375 ரூபாய்! வேற வழி இல்லாம வெயிட் பண்ணிட்டுருந்தோம்! அங்க எக்கச்சக்கமான சிட்டுக்குருவிங்க :) இருந்ததால ஏதோ நேரம் போனதே தெரியலை! ஆகா நம்ம பஸ்ல தான் வருவாங்கன்னு ஒரு நப்பாசையோட இருந்தேன்! ஆனா அங்கதான் விதி ஒரு பெரிய சதி செஞ்சுடுச்சு! திடீர்னு ஒரு பஸ் வந்தவுடனே எல்லாரும் ஏற ஆரம்பிச்சாங்க! சரி நாமும் ஏறலாம்னு எழுந்தேன்! அப்பத்தான் கூட வந்த நண்பன் சொன்னான்

“அது எர்ணாகுளம் போற வண்டிடா!”

“அதனால என்ன! நாம எர்ணாகுளம் போயிட்டு சென்னை போலாமே?”
“நான் ஏதாவது அசிங்கமா திட்டுறதுக்குள்ள வந்து உக்காந்துடு!”

நானும் பேசாம வந்து உக்காந்துட்டேன்! அப்பத்தான் பக்கத்துல ஒரு பிரகஸ்பதி பேசிட்டு இருந்தாரு “இந்த டிபார்டெட் படத்துல என்ன இருக்குன்னு அதுக்கு போய் நோபல் பரிசு கொடுத்தாங்க? பேசாம வேற ஏதாவது படத்துக்கு கொடுத்திருக்கலாம் சார்!” அடப்பாவிங்களா! சினிமாவுக்கெல்லாம் எப்படா நோபல் பரிசு கொடுக்க ஆரம்பிச்சாங்க? உங்க அலம்பலுக்கு ஒரு அளவே இல்லையாடா? இந்த மாதிரி ஆளுங்களோட என்ன பிரச்னைனா, இவிங்க பேசிக்கறதோட இல்லாம அக்கம்பக்கத்துல எவனாவது இருந்தான்னா அவனையும் உள்ள இழுப்பானுங்க! அதே மாதிரி இந்த ஆளும் சொல்லி முடிச்சுட்டு என்னைப்பார்த்து “என்ன தம்பி? நான் சொல்றது சரிதானே?” ன்னு கேட்டாரு. “நான் வேணும்னா அடுத்த தடவை கொடுக்கறத்துக்கு முன்னாடி உங்களை கேக்காம கொடுக்க வேணாம்னு சொல்லட்டுங்களாண்ணா?” ன்னு சொல்லலாம்னுதான் நினைச்சேன்! ஆனா உயிரோட ஊர் போய் சேரணும்ன்ற ஒரே காரணத்துக்காக பேசாம இருந்துட்டேன்! இப்படியே வெயிட் பண்ணிட்டுருந்தப்ப ஒரு வழியா நாங்க ஏற வேண்டிய வண்டி வந்துச்சு. வண்டி வேற பாக்கறதுக்கு கொஞ்சம் நல்லா இருந்துச்சு! சரின்னு நானும் என் கூட வந்தவனும் ஏறுனோம்


ஏறி உக்காந்தா எனக்கும் அவனுக்கும் வேற வேற இடத்துல சீட்! எனக்கு பக்கத்துல காட்டெருமை மாதிரி ஒருத்தன் வந்து உக்காந்தான்! எப்படியும் ஒரு 120 கிலோ இருப்பான்! அவன் தொபுகடீர்னு வந்து உக்காந்ததுல நான் கிட்டத்தட்ட கொஞ்ச தூரம் மேல பறந்துட்டேன்! ஒரு ஸீ ஸாவுல நீங்க ஒரு பக்கம் உக்காந்திருக்கும்போது இன்னொரு பக்கத்துல திடீர்னு ஒரு பாராங்கல்லை தூக்கி போட்டா எப்படி இருக்கும்? அந்த மாதிரி இருந்துச்சு! இதுல என்னை பாத்து
“தம்பி கொஞ்சம் தள்ளி உக்காருங்கன்னு” சொன்னான்!
“ஏங்க இதுக்கு மேல தள்ளி உக்காந்தா ஜன்னல் வழியா தொங்கிட்டு தாங்க வரணும்!”
இதுக்கு மேல விட்டு வைச்சா பிரச்னை ஆயிடும்னு பஸ்ல இருந்தவர்ட்ட சொல்லி என் நண்பனையே பக்கத்துல உக்கார வைச்சுகிட்டேன்! ஒரு வழியா வண்டி புறப்பட்டுச்சு.

ஆனா திடீர்னு வண்டி சென்னை போக வேண்டிய திசைக்கு எதிர் திசைல கேரளாவ நோக்கி போக ஆரம்பிச்சுடுச்சு! ஆகா சோலியை முடிச்சுட்டாங்கடான்னு யோசிச்சுட்டுருக்கும்போதே வண்டி ஒரு கிமீ போய் ரிவர்ஸ் எடுத்துச்சு! அடப்பாவிங்களா! ரிவர்ஸ் எடுக்கறதுக்கு இப்படி ஒரு அளப்பறையா? ஆரம்பமே அட்டகாசமா இருக்கே! நாளைக்கு ஊர் போய் சேர்ந்த மாதிரி தான்னு யோசிச்சிட்டுருந்தப்பவே திடீர்னு வண்டியை தாறுமாறா ஒட்ட ஆரம்பிச்சுட்டான்! நாளைக்கு உயிரோட ஊர் போய் சேர்ந்தா போதும்னு கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு படுத்துட்டேன்! புஷ் பேக் ஸீட்டை புஷ் பண்ணலாம்னு பண்ணா பின்னாடி இருக்கறவரு “தம்பி! தம்பி! என்ன பண்றீங்க? இப்படியெல்லாம் ஸீட்டை உடைக்காதீங்க!” ன்னாரு. “அங்கிள்! நான் இந்த பஸ்ல வந்ததுக்கு ஒரே காரணம் இந்த புஷ் பேக் தாங்க! அதுக்கும் ஆப்பு வச்சிடாதீங்க! வேணும்னா உங்களுக்கும் செஞ்சு தரேன்” னு சொல்லி எழுந்து போய் அவருக்கும் புஷ் பண்னி தந்துட்டு வந்து படுத்தேன்! எப்படியும் காலைல ஒரு 6 மணிக்கெல்லாம் போயிடுவான்னு படுத்துட்டேன்!

இங்க தான் விதி ஃபுட்பால் விளையாட ஆரம்பிச்சுடுச்சு. கோவைல இருந்து சென்னைக்கு போறதுக்கு ரெண்டு வழி இருக்கு! பெரும்பாலான வண்டிங்க சேலம், விழுப்புரம் வழியா சென்னை போகும்! கார்ல போறவங்கெல்லாம் ஓமலூர், வேலூர் வழியா சென்னை போவாங்க! பஸ்லாம் எப்பவும் முதல் ரூட் வழியா போகும். அப்படி போகும்போது மேல்மருவத்தூர் தாண்டி மதுராந்தகத்துல இறங்கிடலாம்.

நானும் அந்த வழியாதான் போவான்னு நம்பி உக்காந்துட்டேன். காலைல எழுந்திருக்கும்போது மணி ஆறு! அரக்க பரக்க சுத்தி முத்தி பேந்த பேந்த முழிச்சுகிட்டே எங்க இருக்கோம்னு பாத்தா ஒண்ணுமே விளங்கல! ஒரு வேளை தாம்பரம் தாண்டி போயிருப்பான்னோனு டிரைவர் கிட்ட போய் கேட்டா இப்பதாங்க வேலூர் வந்துருக்குன்னு சொன்னான்! தலைல இடி விழுந்த மாதிரி இருந்தது! இப்ப எங்க வூட்டுக்கு போகணும்னா நடுவுல இறங்கி ஒரு 3 மணி நேரம் பயணம் பண்ணணும்! வேற வழியில்லாம நொந்து நூடுல்ஸா போய் நடுவுல இறங்கி 3 பஸ் மாறி 11 மணிக்கு வீட்டுக்கு போய் சேர்ந்தேன்!

இந்த மேட்டரை வீட்டுல சொன்னா கெத்துக்கு குறைச்சல் வந்துடும்னு வண்டி பஞ்சர் அப்படி இப்படின்னு சமாளிச்சு ஒரு வழியா மேட்டர இத்தோட க்ளோஸ் பண்ணிட்டேன்!

இதுனால எல்லாருக்கும் நான் சொல்லிக்கிறது என்னன்னா, எப்ப வண்டி ஏறுனாலும் ரூட் விசாரிச்சுட்டு ஏறுங்க! அப்படியே இப்படி ஏதாவது பல்பு வாங்க நேர்ந்தாலும் கெத்தா தோள்ல இருக்க தூசியை துடைச்சிட்டு அப்படியே கெத்தை மெயிண்டைன் பண்ணிங்கங்க!

என்ன இருந்தாலும் ஆம்பிளைக்கு கெத்து தான சொத்து!!

வர்ட்டா!!

Thursday, June 14, 2007

முதல் மொக்கை!!

எதையும் துவங்கும்முன் எல்லாம் வல்ல இறைவனுக்கு என் கோடானு கோடி நன்றிகள்!!! என் முதல் பதிவுக்கு வருகை தந்துள்ள நல்ல உள்ளங்களே! வருக வருக!! என்னதான் இங்கிலீசுலயே பீட்டர் விட்டு கதையா கதையா எழுதுனாலும் நம்ம தமிழ்ல எழுதற மாதிரி வருமா? அதான்! எப்படியாவது ஒரு தமிழ் பதிவு ஆரம்பிச்சுடனும்னு பகீரத பிராயத்தனம் பண்ணி, சீவீஆர் அண்ணணை படாத பாடு படுத்தி, ஒரு வழியா இங்க வந்து நிக்கறேன்! நான் இதை ஆரம்பிச்சது எதுக்குனா, வெட்டி மாங்கா போடறுதுக்கோ, வியாக்கியானம் பேசறதுக்கோ மட்டுமில்லை. அப்பப்ப என் மனசுல தோன்ற சிந்தைனங்கள உங்களோட பகிர்ந்துக்கறுத்துக்காகவும்தான். அதனால படிச்சவுடனே மறக்காம பின்னூட்டம் கொடுத்துட்டு போங்க!! மத்தபடி என்ன பத்தி சில வார்த்தைகள்!!

பேயர்: சிடிகே (எ) ச.தினேஷ் குமார்
வயது: இன்னும் யூத்து தான்!
பிடித்த சில வாக்கியங்கள்:

“தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!”

“கெத்து தான் ஆம்பிளைக்கு சொத்து!!”

காதலைப்பற்றி:

“நேற்று நீ சிரித்தாய்! இன்று அவள் சிரிப்பாள்! நாளை ஊரே சிரிக்கும்! ”

“காதல்ன்றது மழைல நனையற மாதிரி! நனையும்போது சந்தோஷம்! நனைஞ்ச பின்னாடி ஜலதோஷம்!!”

“காதல்ல விழுறதும் சேத்துல விழறதும் ஒண்ணுதான்! சேத்துல விழுந்தா டிரெஸ் காலி! காதல்ல விழுந்தா பர்ஸ் காலி!” (லவ் பண்றதுக்கு பொண்ணு கிடைக்க்லைன்னா இப்படி ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியது தான்!)

மத்தபடி எழுதறுத்துக்கு மானாவரியா மேட்டர் இருக்குது! அடுத்த பதிவுல சந்திக்கிறேன்!! வரட்டுமா!!!